பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் இவ்வருடத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 21 பயங்கரவாத அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்க கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதே ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் 1373/2001 தீர்மானத்தின் கீழ் குறித்த பட்டியல் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பான வழக்கமான தகவல் பரிமாற்றங்களின் அடிப்படையில் குறித்த பட்டியல் சீரான இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் இம்முறை வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்குமாறு பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அந்தவகையில் கடந்த ஆண்டு இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தொடர்ந்தும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.