நான்கு தினங்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த மலையகத்தைத் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவன் இன்று மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் கரையாக்கன்தீவை அண்டியுள்ள பகுதியிலேயே குறித்த மாணவனின் சடலம் கரையொதுங்கியுள்ளது என வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரபத்தனை, ஹோல்புறுக் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் (21) என்ற கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
இவரைத் தேடும் பணி நான்கு நாட்களாகத் தொடர்ந்தது.
மாணவனின் கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கல்லடிப் பாலத்துக்கு அருகில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டது.
அத்துடன், சி.சி.டி.வி. கமரா காட்சிகளும் ஆராயப்பட்டன. தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்பட்டது.
இவ்விவகாரத்தைக் கையாள்வதற்குத் தனிப் பொலிஸ் குழுவும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.