முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வேணாவில் வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
பாடசாலையின் முதல்வர் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையின் முதல்வர், பெற்றோர்களிடம் சாதியம் பேசுவதுடன், இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும்.
அத்துடன் பாடசாலை மாணவர்களின் மதிய உணவிற்காக அடைக்கப்பட்டு வருகின்ற மீன்களை மது அருந்தவதற்கு பயன் படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் பல தடவைகள் வலயக்கல்விப் பணிமனைக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமையினாலேயே தாம் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை பாடசாலையின் அதிபர் உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைகளைத் தாங்கியவாறும், பல கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லை வலையக்கல்விப் பணிப்பாளர் திருமதி.உமாநிதி புவனராஜா, முதல்வர் இனி பாடசாலைக்கு வருகைதரமாட்டார் எனவும், புதிய முதல்வரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலை வளவினுள் செல்ல அனுமதித்தனர்.
அதன் பின்னர் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்றன.
பாடசாலை முதல்வரை மாற்றுவது தொடர்பாக, முல்லை மாவட்ட அரச தலைவரின் இணைப்பாளரின் பிரதிநிதியிடம் அரசதலைவருக்கான மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்திருந்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் இணைப்பாளர் பத்மநாதன் சுபாகரன், முல்லைத்தீவு மாவட்ட அரச தலைவரின் இணைப்பாளருடைய பிரதிநிதி என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.