பிரிட்டன் இளவரசர் ஹரி மெக்கன் தம்பதிகள் கனடாவில் குடியேறவுள்ளதாக செய்திகள் உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் அவர்களை கனடா வரவேற்பதாக கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
பிரிட்டன் அரச குடும்பத்தினர் இங்கு வருவது குறித்து பெரும்பாலான கனேடியர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
ஆனால் அவர்களின் வருகை குறித்த மேலதிக செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவேண்டியுள்ளது என குளோபல் நியூஸூக்கு நேற்று வழங்கிய பேட்டியில் ட்ரூடோ கூறினார்.
பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்கள் கனடாவில் தங்கிருக்கும்போது அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அதற்கான செலவீனங்களை எவ்வாறு ஈடு செய்வது? என்பது குறித்த விவகாரங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கனேடிய அதிகாரிகளும் இந்த விடயத்தில் அரச குடும்பத்தின் இறுதி முடிவுகளைக் கேட்க காத்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து மற்றும் கனடாவில் இனி வரும் காலங்களில் நேரத்தை செலவிட இருப்பதாக இளவரசர் ஹரி மற்றும் மெக்கன் தம்பதி எடுத்த முடிவுக்கு ராணி எலிசபெத் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
ஹரி மற்றும் மெக்கன் தங்கள் புதிய வாழ்க்கையில் பொது நிதியை நம்ப விரும்பவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் அரச குடும்பத்தின் பிரதிநிதிகளான ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் செலவுகள் குறித்து விவாதிக்க கனேடிய அரசாங்கத்தை பிரிட்டன் அரச குடும்பத்தினர் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று ட்ரூடோ கூறினார்.
பிரிட்டிஷ் றோயல் தம்பதியினரைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிகபட்ட பாதுகாப்பு தேவையென கனேடிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
நாங்கள் அவர்களின் முடிவுகளுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்போம். ஆனால் அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன.
பொறுப்புகள் உள்ளன. இறுதி முடிவுகள் என்னவென்று எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்து வெளியிட்டுள்ளார்.