13வது திருத்தத்தை அண்ணன் வழங்க முடியும் என கூறுகிறார். தம்பி வழங்க முடியாது என கூறுகிறார். இது முன்னுக்கு பின் முரணான செய்திகளாக இருக்கிறது. தேர்தலை நோக்கிய வார்த்தை பிரயோகமாக தான் அதை பாக்கிறேன். என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்....
நாம் எதிர்பார்த்தது போல புதிய அரசு ஒரு இராணுவ சிந்தனையுடன் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.சிவில் நிர்வாகங்களில் இராணுவ புலனாய்வாளர்களின் செயற்பாடு பரவலாகி காணப்படுகின்றது. இனப்படுகொலையை செய்தவர்கள் அரச நிர்வாகங்களில் உயர் பதவிகளை பெற்றிருக்கிறார்கள்.
இராணுவ கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதே அதற்கான காரணம். இது தமிழ் மக்களின் வாழ்வியலில் பிரச்சனையை ஏற்படுத்தி நிற்கின்றது.
ராணுவ அதிகாரி ஒருவர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையாக இருந்தால் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையின் ஆரம்பமாக அது இருக்கும். எனவே எதிர்வரும் தேர்தலின் பின் பாரிய அடக்குமுறைக்குள் அனைவரும் சிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே இந்த தேர்தலில் பாரிய வெற்றியை காணவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அதை நோக்கி கூட்டமைப்பு ஒற்றுமையுடன் பயணிக்கும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றியது இல்லை. யாராகினும் கூட்டமைப்பின் கொள்கையை ஏற்று தமிழர்களிற்காக முன்வரும் போது கூட்டமைப்பு அவர்களை ஏற்றுக்கொள்ளும். இதேவளை வடகிழக்கிற்கு அப்பால் போட்டியிடுவது தொடர்பாக இறுதி தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை.
13வது திருத்தம் தொடர்பாக சிந்திப்பதாக பிரதமர் மகிந்த இராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் அதி உயர் அதிகாரத்தை பெற்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 13 வது திருத்தத்தில் உள்ள பலவிடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார். குறிப்பாக காணி பொலிஸ் அதிகாரங்கள் பற்றி சிந்திக்கவே முடியாது என கூறியிருக்கிறார்.எனவே அண்ணன் வழங்க முடியாது என கூறுகிறார் தம்பி வழங்க முடியும் என கூறுகிறார் இது ஒரு முன்னுக்கு பின் முரணான செய்திகளாக இருக்கிறது. தேர்தலை நோக்கிய வார்த்தை பிரயோகமாக தான் அதை பாக்கிறேன்.
போரின் போது சர்வதேச நாடுகளை நாடி தமது விடயங்களை சாதித்துகொண்டவர்கள், சர்வதேசத்திற்கு நேரடியாகவே வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள், பான்கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கையை விட்டிருக்கிறார்கள். சர்வதேசத்துடன் சேர்ந்து ஈழ விடுதலை போராட்டத்தை இல்லாமல் செய்துவிட்டு தற்பொது மட்டும் சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் ஏன் போகின்றீர்கள் என்று மகிந்த கூறுகிறார்.
போர் நடந்த போது அந்த வாதத்தை அவர் கூறியிருக்க வேண்டும். இன்று தமிழர்கள் நிற்கதியான நிலையில் இருக்கும் போது இந்த கருத்தை சொல்லுவது நியாயமான அரசியல் வாதிக்கு பொருந்தாது.
சர்வதேச இராஜதந்திரிகள் இங்கு வருவது அவர்களின் நலன்களை முன்னிறுத்தியதாக தான் இருக்கும். ஆட்சி மாற்றம் இடம்பெற்ற நிலையில் சர்வதேசம் இங்கே வருகிறது என்றால் அவர்களது சுஜ நலன்களிற்காகவே வருகிறார்கள் என்பதே உண்மை. மாறாக தமிழர்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் இவர்கள் செயற்படுவார்களாக இருந்தால் அது உலக அரசியலில் நியாயபூர்வமான சிந்தனையாக இருக்கும் என்றார்.