லங்காதீப பத்திரிகையின் நீதிமன்ற ஊடகவியலாளராக பணியாற்றும் துறைசார் ஊடகவியலாளர் நிமந்தி ரணசிங்கவுக்கு முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட அவமதிக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து குறித்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர் நிமந்தி ரணசிங்கவின் தொழில்சார் நடவடிக்கையொன்றின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலொன்று குறித்த முறைப்பாடொன்றை மேற்கொள்ள முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, குறித்த முறைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென தெரியவருகின்றது.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்துக்கொள்ளும் பிரிவின் ஆலோசனையின் பேரிலேயே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்ததாக ஊடகவியலாளர் நிமந்தி தெளிவுபடுத்த முயற்சித்துள்ளார்.
அவை எதனையும் பொருட்படுத்தாத பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஊடகவியலாளரின் சுய மரியாதை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.
இதன் காரணமாக ஊடகவியலாளர் நிமந்தி நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரச நிறுவனமொன்றின் இதுபோன்ற பொறுப்பற்ற செயற்பாட்டை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுமக்களுக்கு உண்மைத் தகவல்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரச நிறுவனத்தின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை.
எனவே, இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொண்டு, உரியவர்களுக்கு நடவடிக்கையெடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கின்றது.