ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு சிறிகொத்தவில் கட்சியின் பாராளுமன்றக்குழு கூடவுள்ளது.
ஏற்கனவே பல தடவைகள் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் மீளவும் நாளை ஐ.தே.க. பாராளுமன்றக்குழு கூடவுள்ளது.
டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர். பிரேமதாச, டி.பி.விஜேதுங்க போன்ற சிரேஷ்ட தலைவர்களின் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க 1994 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அன்றிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கும் அதிகக் காலம், சுமார் 31 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை தோல்விப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்.
1994 ஆம் ஆண்டு காமினி திசாநாயக்கவின் மறைவினையடுத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருந்த போதிலும் அதனை தவிர்த்து, 1999 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் முதலில் போட்டியிட்டார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் பாரிய தோல்வியுற்ற ரணில் விக்ரமசிங்க 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவிடம் மீண்டும் தோல்வியடைந்தார்.
பொது வேட்பாளர் என்ற போர்வையில், 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது பொறுப்பை தவிர்த்து, எதிர் அணி வேட்பாளருக்கு மறைமுகமாக உதவி செய்துள்ளமை தேர்தலின் பின்னர் அவர் தெரிவித்த சில கருத்துக்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது.
பொதுத்தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு 50 நாட்களை விடவும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இம்முறையும் ரணில் விக்ரமசிங்கவை சுற்றியுள்ள ஒரு சிலர் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நாளைய கூட்டத்தில் கட்சி தலைமை குறித்து இறுதி முடிவு எட்டப்படுமா என்பது பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.