நவம்பர் 2019 இல் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் அடிப்படை மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2019 இல் சர்வதேச மனித உரிமை நிலைவரம் குறித்து வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது, ஜனநாயக அடிப்படைகளை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் ஒரு பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கடந்த கால துஷ்பிரயோகங்களை மறைக்கும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார் என மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற துஷ்பிரயோகங்களிற்கு தீர்வு காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கப்போவதில்லை என்பதைத் வெளிப்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.