சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் காட்சியரஙகு ஒன்று அகற்றப்பட்ட பிரச்னை நேற்றுதான் ஓய்ந்தது. இந்த நிலையில் இன்று புத்தகக்காட்சி ஏற்பாட்டாளர்களால் பேச அழைக்கப்பட்ட சைவத் தமிழ் மெய்யியலாளர் கரு. ஆறுமுகத்தமிழன் அவமதிக்கப்பட்டது, அரஙகில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேடையில் அவர் பேசிக்கொண்டிருக்கையில் புத்தக சங்கத்தின் சார்பில் ஒலிவாஙகியைப் பிடித்த ஒருவர், சிறு மேடை நாகரிகமும் இல்லாமல் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார். துண்டுச்சீட்டைக் கொடுத்து இதைக் குறிப்புணர்த்தியிருக்கலாம்; இப்படியா சொல்வது என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
பேசிக்கொண்டிருந்த பேரா. ஆறுமுகத்தமிழனோ கோபத்துடன் அரஙகிலிருந்து வெளியேறி தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார். உடனே அங்கிருந்த அவருடைய ரசிகர்களும் அவரின் பின்னால் ஓடினர். அநாகரிகமாக நடந்துகொண்ட புத்தக சங்கத்தவரை கடுமையாக திட்டித்தீர்த்தனர்.
போலீசு சொல்லியதால்தான் உடனே பேச்சை முடிக்கச்சொன்னதாக ஒருவர் சொல்ல, அங்கிருந்த இளைஞர்கள் போலீசாரை சரமாரியாகக் கேள்விகேட்டனர். முதலில் ஒருமையில் பேசிய போலீசு அதிகாரி ஒருவர், பின்னர் நேரப்படிதான் தான் நடந்துகொண்டதாகக் கூறி, சமாதானப்படுத்த முயன்றார்.
தொடர்ந்து பேராசிரியரைச் சுற்றி பொதுமக்கள் அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டும் அவருக்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டிருந்தனர். மேற்கொண்டும் நிலைமை முறுகல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக புத்தக சங்க உதவித் தலைவரான நாகராசன் அங்கு வந்து தலையிட்டார்.