தோட்டத்தொழிலாளர்களுடைய 1000 ரூபா சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளமை தைத்திருநாளன்று மலையக மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தி என தெரிவித்த மீன்பிடி நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் தமது அரசாங்கம் கூடிய விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தைப்பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு -முகத்துவாரம் ஸ்ரீவெங்கடேஷ்வர் மஹா விஷ்ணு கோவிலில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது ,
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சி கரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத்தொழிலாளர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வுகோரி போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக எங்களுடைய அரசாங்கம் 1000 ரூபா சம்பள உயர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியிருக்கின்றார்.
ஆகவே கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எமது அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.