கிளிநொச்சி தமிழ்ச்சங்கத்திற்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி கூட்டுறவு மண்டப வீதியில் ஐம்பது லட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடம் இன்று பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழா நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க நிறுவுனர் வே.இறைபிள்ளை தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது முன்னால் அரச அதிபர் கந்தையா பொன்னம்பலம் கேட்போர் கூடமும், பணிமனையும் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்த்தாய் இசைக்கப்பட்டதுடன், தமிழிற்காய் உழைத்த பெரியார்களிற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
26 வருடங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் கிளிநொச்சி தமிழ்ச்சங்கமானது சொந்தமான கட்டடம் இல்லாமல் பல்வேறு சிரமங்களின் மத்தியில் இயங்கி வந்தது. இவ்வாறான சூழலிலும் தமிழ் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழ்ச்சங்கத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது,
குறித்த கட்டடத்தினை பயன்படுத்தி மாவட்டத்தில் தமிழ் சார் பண்பாட்டு விழுமியங்களை வளர்ப்பதற்கு முடியும் என கிளிநொச்சி தமிழ் சங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுவரை கட்டடம் ஒன்று இல்லாமையினால் 25ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட முடியாது போனதாகவும், இவ்வாண்டு இடம்பெறவுள்ள திருக்குறள் விழாவில் குறித்த நிகழ்வையும் இணைத்து சிறப்பாக கொண்டாட உள்ளதாகவும் நிறுவுனர் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.