நாடு முழுவதும் நாளை புதன்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏழரை மணி நேர மின்வெட்டு அமுல் செய்யப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் இதனை உறுதி செய்தது.
நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து வறண்டு கிடப்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனல் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பெற முடியாது இலங்கை மின்சார சபை போராடி வருகிறது.
கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் அலங்கை அரசு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த வார இறுதியில் கப்பலில் வந்த டீசலுக்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இலங்கை மத்திய வங்கி டொலர்களை வழங்கியுள்ள போதிலும், நாட்டின் அனல் மின் நிலையங்களை தொடர்ச்சியாக இயக்குவதற்கு அது போதுமானதாக இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் கிடைக்காததன் காரணமாக பல அனல் மின் நிலையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை, நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் காசல்ரி, மவுசாக்கலை மற்றும் சமனலவெவ நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்திக்காக நீரை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு மஹாவலி அதிகார சபை பணிப்புரை விடுத்துள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மின்வெட்டு அட்டவணையின்படி, இ மற்றும் எப் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் தலா 5மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை காலப்பகுதியில் 2 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.
பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான நேரத்தில் 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு விதிக்கப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.