சுமார் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக பில்லியனர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
எனினும் ட்விட்டரை வாங்கும் முடிவில் இன்னும் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் போலி பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவு என்று கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வரை ட்விட்டரை வாங்கும் திட்டம் ஒத்திவைக்கப்படுவாதாக எலோன் மஸ்க் நேற்று தெரிவித்தார்.
ட்விட்டரில் போலி கணக்குகளை முற்றாக நீக்க வேண்டியதன் அவசியத்தை எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறார். அந்த நிறுவனத்தை அவர் கையகப்படுத்துவதே இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் எனக் கூறப்படுகிறது.
போர்ப்ஸ் மதிப்பீட்டின்படி 240 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மஸ்க் உள்ளார். டெஸ்லா (Tesla)மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைவராக அவர் உள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே பிரபல சமூக ஊடக வலைத்தளமான ட்விட்டரை வாங்க அவர் முன்வந்துள்ளார். இது தொடர்பாக முதற்கட்ட ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால், மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.