மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியின் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றன.
இதன் கீழ் பெரியகல்லாறு பகுதியில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சா.இராஜேந்திராவின் வழிகாட்டலின் கீழ் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரனின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நுளம்பு பெருகும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெரும் வகையில் தமது வளவுகளை வைத்திருந்தோர் எச்சரிக்கப்பட்டதுடன் அவற்றினை தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இதன்போது டெங்கு தாக்கம் தொடர்பான அறிவுறுத்தல்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு