அவுஸ்திரேலியாவிற்கு எதிராக பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிறிக்கெட் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறனுக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள். இது ஒரு வியக்கத்தக்க முடிவாகவும் திறமையின் சிறந்த காட்சியாகவும் இருந்தது.
இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய தசுன் சானக்க மற்றும் அணியினருக்கு நன்றி.
நான் உட்பட இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு சிறந்த ஒரு சிறந்த போட்டியாக அமைந்திருந்தது எனவும் தனது ட்விட்டரில் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய போதும் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் தசுன் சானக்க அதிரடியால் இலங்கை சிறப்பான வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியின் ஒரு கட்டத்தில் 26 பந்துகளில் வெற்றிக்கு 69 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் இலங்கை தோல்வி அடையும் என கருதப்பட்டது.
ஆனால், அதிரடியில் இறங்கிய அணித் தலைவர் தசுன் சானக்க 25 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் சாமிக்க கருணாரட்னவுடன் 25 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை