அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் தேவாலயம் ஒன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 70 வயது முதியவர், அங்கிருந்த 3 முதியவர்களை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
பர்மிங்காமிற்கு வெளியே, வெஸ்டாவியா ஹில்ஸில் உள்ள சென் ஸ்டீபன்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தின் ஒரு பகுதியில் ஒரு சிறிய குழு இரவு உணவை எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்த துப்பாக்கிதாரி அவர்களைச் சுட்டார்.
இதில் 84 வயதான வால்டர் ரெய்னி, 75 வயதான சாரா யேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
84 வயதான மூன்றாவது பெண், காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார். குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அமைய அவரின் பெயர் வெளியிடப்படாது என வெஸ்டாவியா ஹில்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி ரொபேர்ட் பிண்ட்லே ஸ்மித் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்று மாலை செய்தியாளர்ளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அங்கிருந்த ஒருவரால் அடக்கப்பட்ட துப்பாக்கிதாரி, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரியை அடங்கிய அந்த நகரை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
கடந்த மாதம் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள தைவானிய தேவாலயத்தில் நடந்த ஒரு பயங்கர துப்பாக்கிச் சூடு, டெக்சாஸில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 19 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேரைக் கொன்ற துப்பாக்கிச் சூடு மற்றும் நியூயோர்க் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டுக் சம்பவங்கள் துப்பாக்கி வன்முறைகள் தொடர்பான அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனையடுத்து துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை கடுமையாக்கும் முயற்சிகள் அமெரிக்காவில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.