வடகொரியாவின் அணுகுண்டு சோதனை முயற்சிகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் நாட்டின் இராணுவ மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த நாட்டின் முக்கிய கட்சிக் கூட்டம் கிம் ஜாங் உன் தலைமையில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முக்கிய இராணுவ அமைப்புகளை மறுசீரமைப்பது குறித்து கட்சி விவாதித்ததாக வடகொரிய அரச ஊடகமாக கே.என்.சி.ஏ. தெரிவித்துள்ளது.
வட கொரியா எந்த நேரத்திலும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில் இந்தக் கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் ஏதும் எடுக்கபட்டதா? என்பது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.
எந்த நேரத்திலும் அணு ஆயுத சோதனை இடம்பெறலாம். அதற்கான உத்தரவை கிம் ஜாங் உன் எந்த நேரத்திலும் வழங்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் கொவிட் தொற்று நோய், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வட கொரியா தனது ஏழாவது அணுசக்தி சோதனையை தாமதப்படுத்தலாம் என்று தான் கருதுவதாக தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு சிறிய அணுகுண்டுகள், ஹைப்பர்சொனிக் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் மற்றும் ட்ரோன்களை உள்ளடக்கிய இராணுவ மேம்பாட்டு திட்டங்களை வகுத்தார்.
அத்துடன், எதிரிகளை அழிக்க எல்லா வகையிலும் தங்கள் வலிமையை அதிகரிக்குமாறு வட கொரிய இராணுவத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் கிம் அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதில் பாரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணைகள் மற்றும் ஒரு குறுகிய தூர ஏவுகணை ஆகியனவும் அடங்குகின்றன.