நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள இரவு களியாட்ட விடுதி மற்றும் விடுதிக்கு அருகிலுள்ள தெருவில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியானதுடன், 14 பேர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நோர்வே பொலிஸார் தெரிவித்தனர்.
லண்டன் பப்பில் (London Pub) இருந்து அருகில் இரவு விடுதி வரை துப்பாக்கியால் சுட்டவாறே சென்ற துப்பாக்கிதாரி சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டோரே பார்ஸ்டாட் தெரிவித்தார்.
லண்டன் பப் என்பது ஒஸ்லோவின் மையத்தில் உள்ள ஒரு பிரபலமான பார் மற்றும் இரவு களியாட்ட விடுதியாகும்.
"ஒரு நபர் ஒரு பையுடன் வருவதை நான் கண்டேன், அவர் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்," என சம்பவ இடத்தில் இருந்த நோர்வே பத்திரிகையாளர் ஒலாவ் ரோனெபெர்க் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் என்ன? என்பது உடனடியாகத் தெரியவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஒஸ்லோ பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஹெலிகப்டர்கள் மத்திய ஒஸ்லோவிற்கு மேலே பறந்துகொண்டிருந்தன. அம்புலன்ஸ் மற்றும் பொலிஸ் கார்கள் அவசர ஒலிகளை எழுப்பியவாறு நகரம் முழுவதும் பரபரப்பாக ஓடியதைக் காண முடிந்ததாக நோர்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.