கிரிமியா தீபகற்பத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் எந்த அத்துமீறலும் ரஷ்யாவின் மீதான போர் பிரகடனத்திற்கு சமம். அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்யாவின் பாதுகாப்பு சபை துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev)எச்சரித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகும். கிரிமியாவை ஆக்கிரமிக்கும் எந்தவொரு முயற்சியும் நம் நாட்டிற்கு எதிரான போர் பிரகடனமாகும் என்று மெட்வெடேவ் சர்வதேச செய்தித் தளம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
கிரிமியா தீபகற்பத்தில் நேட்டோ உறுப்பு நாடு ஒன்று அத்துமீறினால் அது நேட்டோ கூட்டணியுடனான மோதலாக மாறும். இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். இதனால் ஒரு முழுமையான பேரழிவு ஏற்படும் எனவும் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்தார்.
பின்லாந்தும் சுவிடனும் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யா தனது எல்லைகளை வலுப்படுத்தும். எந்தவொரு பதிலடி நடவடிக்கைகளுக்கும் தயாராக இருக்கும். அத்துடன் இஸ்கண்டர் ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை (Iskander hypersonic missiles) பின்லாந்து, சுவிடன் எல்லைகளில் நிறுத்தும் நிலை ஏற்படுத் எனவும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்யாவின் பாதுகாப்பு சபை துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்தார்.