ரஷ்யாவின் அச்சுறுத்தலை அடுத்து ஐரோப்பியாவில் அதிகளவு அமெரிக்கப் படைகளை நிலை நிறுத்த உள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் - மாட்ரிட் நகரில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பின்னர் கருத்து வெளியிடும் போதே பைடன் இவ்வாறு கூறினார்.
ஐரோப்பாவில் அமெரிக்க முப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ருமேனியாவில் 3,000 போர் துருப்புக்கள் கொண்ட ஒரு படைப் பிரிவையும், இங்கிலாந்தில் F-35 போர் விமானங்களின் இரண்டு படைப் பிரிவுகளையும், ஸ்பெயினில் இரண்டு அதிநவீன கடற்படை பிரிவுகளையும் நிறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியுள்ளது. முன்னெப்போதையும் விட அதன் தேவை இப்போது அதிகரித்துள்ளது. இதனை நாங்கள் செய்து வருகிறோம் எனவும் பைடன் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக உள்ளதாக 30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டணி கூட்டுப் பிரகடனம் செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த உச்சிமாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் முக்கிய மற்றும் நேரடி அச்சுறுத்தலாக ரஷ்யா உள்ளதாக ஏகமனதாக பிரகடனம் செய்யப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய பிராந்தியத்துக்கு கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் அளித்து வரும் உதவிகளை அதிகரிக்க உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டமையும் குறிப்பிடத்தக்கது.