நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையிலும்,போக்குவரத்து வசதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு மடு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று சனிக்கிழமை(6) காலை முதல் இலவச நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் வாசிப்பு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோதி நகர் கிராம அலுவலர் பிரிவில் இன்று (6) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.
முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடும் மருத்துவ முகாம், வைத்திய கலாநிதி எல்மர் எட்வேட்,சமூக சேவகர் இ.எட்வின் அமல்ராஜ் மற்றும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் நிதி மற்றும் பங்களிப்புடன் இடம் பெற்றது.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோதி நகர் கிராம பொது மண்டபத்தில் இடம் பெற்ற நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் வாசிப்பு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பூமலந்தான்,சோதி நகர்,மடு றோட்,சின்னப்பட்டிவிருச்சான் ஆகிய கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து இலவச மருத்துவ சேவையை பெற்றுக் கொண்டதுடன் தேவையானவர்கள் வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளையும் பெற்றுக்கொண்டனர்.
-குறித்த நடமாடும் மருத்துவ முகாமில் கிராம அலுவலர் மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நாட்டில் மீண்டும் 'கொரோனா' தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்