மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான கே.டபுள்யூ தேவநாயகம் எமது மாவட்டத்திற்கு அளப்பரிய பல சேவைகளை செய்துள்ளார். அவரின் வெற்று இடத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் இன்றுவரை இல்லை என்றே கூறமுடியும் என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தினதும் மட்டக்களப்பு மண்ணினதும் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான கிழக்கு பல்கலைக்கழகத்தை நிறுவியவரும், முன்னாள் அமைச்சர் அமரர் க.வி.தேவநாயகம் அவர்களின் திருவுருவச்சிலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஆவேன். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு சிலை வைப்பது தவறு என்று அரசியலாக பார்ப்பார்கள் என்றால் அதுவே அவர்களின் அறிவற்றவர்களே! நமது அரசியல் செயற்பாடுகள் எப்போதும் மக்கள் சார்ந்ததே ஆகும். நான் கட்சியை நம்பி அரசியல் செய்ய வரவில்லை நாம் காட்டும் காட்சிகளையும் மக்களையும் நம்பித்தான் வந்தேன்.
அவர் நிலம் நிர்வாகம் சார்ந்த அபிவித்தியை முன்னிறுத்தி தனது அரசியல் சேவையை தொடர்ந்தார். எமது மாவட்ட இளைஞர்களின் கல்வி வாழ்வின் ஒளிமயமாக வேண்டும் என்று 1980 காலங்களிலே இந்த கிழக்கு பல்கலை கழகம் ஒன்றை கொண்டு வந்து மட்டக்களப்பு மாவட்டத்தையே திரும்பி பார்க்கும் வண்ணமாக பல கல்விமான் களை உருவாக்கியவர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ஒரு அரசியல்வாதி தனது சமூகத்திற்கு செய்த சேவை என்ன என்பதற்கு இந்த பல்கலைகழகமே சான்று இன்று அவர் மறைந்து இருபது வருடங்கள் சென்றாலும் அவருடைய சேவை இன்றும் தொடர்கின்றது ஒவ்வொரு பட்டதாரியாகவே.
சேவை செய்வதற்காக அரசியல் செய்தவர். கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர், கல்லூரி கிரிக்கட் அணியிலும், ஆளும் கட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த போதிலும் வடமுனைப்பகுதியில் சிங்களக் குடியேற்றத்தை நேரடியாக சென்று தடுத்து நிறுத்தியவர். யாரையும் பழி வாங்கும் எண்ணம் இல்லாத மகான்.
1977 தேர்தலில் அவரை ஆதரிக்காத தகுதி கொண்ட அனைவருக்கும் அரச தொழில் பெற்றுக்கொடுத்தவர். செங்கலடி பொதுச்சந்தை, தபாலகம், பிரதேச செயலகம், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், கிரான் அரச அச்சகம், முறக்கொட்டான்சேனை அரச அரிசி ஆலை போன்ற வற்றை அமைத்து பல வேலை வாய்ப்புகளை வழங்கியவர்.
இப்போது அரசியல் செய்பவர்கள் இவரது கால்த்தூசிக்கும் லாயக்கு இல்லாதவர்கள். நம்ம மட்டக்களப்பு ஆளுமை. முடிந்தால் அவர் மாதிரியாவது அரசியல் செய்யுங்கள் என்றார்.
பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க வர்த்தகர் எஸ்.கிரியின் நிதிப்பங்களிப்பில் கிழக்குப்பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அமரர் க.வி.தேவநாயகம் நிறுவப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு