கொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, உயர்நீதிமன்ற வளாகம், பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரதேசங்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி ஒன்று கூடல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை குடி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றில் இன்று சோஷலிய இளைஞர் முன்னணியினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.