பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்து போட்டிகளில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணியினருக்கு இலங்கை ரசிகர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று கலந்துகொண்டிருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் பகல் - இரவு போட்டியாக நடைபெற்றது.
இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இவ்வாறு மஞ்சள் ஆடை அணியுமாறு அவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்தத் திட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் இன்றைய போட்டியை காணவந்த பெரும்பாலான ரசிகர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தும் அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் காணப்பட்டிருந்தனர்.
அவுஸ்திரேலிய அணியிடம் ரி-20 தொடரை இழந்திருந்த நிலையில் சுமார் முப்பது வருடங்களின் பின்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இறுதி போட்டி மீதமிருந்த நிலையிலேயே தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை, கொழும்பு